ஏழை மாணவர்களுக்கு உதவவே ஆங்கில வழிக் கல்வி: உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு வாதம்

ஏழை மாணவர்களுக்கு உதவவே ஆங்கில வழிக் கல்வி: உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு வாதம்
Updated on
1 min read

ஏழை மாணவர்களுக்கு உதவவே ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இதன்படி 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தெலுங்கு, உருது மீடியங்களுக்கு இணையாக ஆங்கில மீடிய வகுப்புகளையும் தொடங்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் அரசின் முன்னெடுப்புக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இம்மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆந்திர அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாத ஆஜரானார். அப்போது அவர் கூறும்போது, ''குழந்தைகளின் கற்றல் மொழி ஆங்கிலமாக இருந்தால் மட்டுமே, அவர்கள் தனித்தீவுகளாக விலக்கி வைக்கப்பட மாட்டார்கள்.

ஏழை மற்றும் விளிம்புநிலை மாணவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளை அளிக்க ஆங்கில வழிக் கல்வி உதவும். அவர்களின் வருங்கால வேலைவாய்ப்புக்கும் கைகொடுக்கும்.

அதேநேரத்தில் தாய்மொழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, மண்டலத் தலைநகரங்களில் தெலுங்குப் பள்ளிகள் அமைக்கப்படும். அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதேபோல பெரும்பான்மையான பெற்றோர்கள் ஆங்கில வழிக்கல்வியில், தங்களி குழந்தைகள் படிப்பதையே விரும்புகிறனர்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைத்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in