Published : 05 Oct 2020 07:13 AM
Last Updated : 05 Oct 2020 07:13 AM

‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: 8-ம் வகுப்பின்போதே ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கு தயாராகுங்கள்- மாணவர்களுக்கு சென்னை ஐஐஐடி பேராசிரியர் அறிவுரை

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்ற ஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியின் 3-ம் அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சனிக்கிழமை நடைபெற்ற 2-ம்நாள் நிகழ்வில், சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள ஐஐஐடி-டிசைனிங் அண்ட் மேனுபேக்சரிங் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் ரகுராமன் முனுசாமி, ‘ஐஐஐடி கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்றியதாவது:

இந்தியாவில் ஐஐடி, என்ஐடி,ஐஐஐடி என 97 உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளன.ஐஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) மாணவர் சேர்க்கைக்கு ஜெஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் போதும். இந் நிறுவனமானது, தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட ஐஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் டிசைனிங் மற்றும் மேனுபேக்சரிங் பாடம் தொடர்பானவை 3 கல்வி நிறுவனங்கள். அதில் ஒன்றுதான் சென்னை வண்டலூர் அருகேயுள்ள ஐஐஐடி. மற்றவை மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரிலும் ஆந்திராவில் கர்னூலிலும் அமைந்துள்ளன.

சென்னை ஐஐஐடியில் பிடெக், எம்டெக், எம்.டிசைன், பிஎச்.டி ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிடெக் படிப்பில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், டிசைன் அண்ட் இன்னோவேஷன், ஸ்மார்ட் மேனுமேக்சரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

இங்கு படித்து முடிக்கும் மாணவர்கள் சொந்தமாக தொழில்தொடங்கவும் தொழில்முனைவு மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், கூகுள், மைக்ரோசாப்ட், எல் அண்ட் டி இன்ஃபோடெக், டெக் மஹேந்திரா உள்ளிட்டமுன்னணி நிறுவனங்கள் ஆண்டுதோறும் கேம்பஸ் இன்டர்வியூவை இங்கு நடத்துகின்றன.

ஐஐஐடி மாணவர் சேர்க்கையானது ஜெஇஇ மெயின் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. இத்தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டம் சார்ந்து இருப்பதால் சிபிஎஸ்இ முறையிலேயே கேள்வி கேட்பார்கள். பொதுவாகவே, மாநில பாடத்திட்டத்தில் கேள்விகள் நேரடியாக கேட்கப்படும். ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அவ்வாறு நேரடியாக இல்லாமல், சுற்றிவளைத்து, சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேட்பார்கள். எனவே, 8-ம் வகுப்பு படிக்கும்போதேதயாராகிவிட்டால் ஜெஇஇ நுழைவுத்தேர்வில் மாநில பாடத்திட்ட மாணவர்களும் எளிதில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு ரகுராமன் கூறினார்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சர்குலேஷன் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார்.

இதன் அடுத்த அமர்வு வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். கட்டணம் கிடையாது. தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நிகழ்வு நடைபெறும். இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

கடந்த 2 நிகழ்வுகளையும் தவற விட்டவர்கள் https://bit.ly/3ldff6T, https://bit.ly/3jswHUa என்ற யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x