Published : 16 Sep 2020 06:57 PM
Last Updated : 16 Sep 2020 06:57 PM
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்கும் மாணவர்கள் அக்டோபர் 7-ம் தேதிக்குள் பள்ளிகளில் சேரவேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்துத் தனியார் பள்ளிகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் நுழைவு நிலை வகுப்பில், இந்தச் சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆக.27-ம் தேதி தொடங்கியது. இதற்கு செப்.25-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் பரிசீலனைக்குப் பின் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு விண்ணப்பங்களின் விவரங்கள், பள்ளிகளின் தகவல் பலகையில் வெளியிடப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், அக்.1-ம் தேதி முதல் குலுக்கல் நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வாகும் மாணவர்கள், அக்.7-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர வேண்டும்.
அக்டோபர் 7-ம் தேதி நிலவரப்படி சேர்க்கை முடிந்த இடங்கள் போக மீத இடங்கள் இருந்தால், அவை நவ.15-ம் தேதி வரை காலியாக வைக்கப்பட்டிருக்கும். அதை நிரப்புவது குறித்துப் பின்னர் அறிவிப்பு வெளியாகும்.
இதுகுறித்துப் புகார்கள் இருந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தனியார் பள்ளி இயக்குனர் தலைமையிலான குழுவிடம் தெரிவிக்கலாம்''.
இவ்வாறு தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT