

தற்சார்பு இந்தியா திட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான கவுன்சில் தலைவரும் பேராசிரியருமான அனில் சஹஸ்ரபுதே நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’அண்மையில் எல்லையில் நடைபெற்ற குழப்பம் அனைவரும் அறிந்ததே. அதனால் ஒட்டுமொத்த தேசமும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நம்முடைய தேவைகளுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கும் போக்கும் அவசியமாகிறது.
கரோனா சூழலில் தனிமனிதப் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் என் 95 மாஸ்குகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனாலேயே அவற்றின் தயாரிப்பும், வாய்ப்பாக மாறியுள்ளது.
காலம் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாககவும் உள்ளூர்ப் பொருட்களையே வாங்கும் தேசிய இலக்கான ’தற்சார்பு இந்தியா’ திட்டத்தை அடையவும் வைக்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்முடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதன்மூலம் தொழில்நுட்பத்தைப் புத்தாக்க முறையில் பயன்படுத்த வைத்து மாற்றுப் பொருட்களை உருவாக்க வேண்டும். தற்சார்பு இந்தியா என்ற நிலையை மட்டும் ஏற்படுத்தாமல், சர்வதேசத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.