Published : 20 May 2020 03:07 PM
Last Updated : 20 May 2020 03:07 PM
கேரளத்தில் அனைத்துவகைத் தேர்வுகளும் மறு உத்தரவு வரும் வரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் பத்தாம் வகுப்பு உள்பட மாநில அரசால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகள் மே 26 முதல் தொடங்குவதாக இருந்தன. நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் இதையே உறுதிப்படுத்தினார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இதேபோல் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் கரோனாவுக்கு எதிரான நான்காம் கட்டப் பொதுமுடக்கம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளத்தில் அனைத்துவகைத் தேர்வுகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கேரள அரசு இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக, கேரள அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கித் திட்டமிட்டவாறு தேர்வுகளை நடத்த முடிவு செய்திருந்தது. ஆனால், பொதுமுடக்க நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதித்திருப்பதால் இந்தத் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே கரோனா தொற்றுப் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மாநிலமான கேரளத்தில் கரோனா பரவல் இப்போது கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும் அண்மை நாட்களாக தொற்றுப் பரவல் சற்றே அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் அனைத்து வகைத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டிருப்பது, அம்மாநிலப் பெற்றோர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT