Published : 20 May 2020 12:05 PM
Last Updated : 20 May 2020 12:05 PM
கைப்பந்து விளையாட்டுப் பயிற்சிக்குச் சேர்த்து வைத்த பணத்தை கரோனா பொதுமுடக்கத்தால் வாடும் ஏழைகளுக்குக் கொடுங்கள் என்று வாரி வழங்கியிருக்கிறார் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மைதிலிநாதன்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் மைதிலிநாதன் வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்புப் படிக்கிறார். வடுவூர் பகுதி வாலிபால் விளையாட்டுக்குப் பெயர் பெற்றது என்பதால் மைதிலிநாதனுக்கும் இயற்கையாகவே கைப்பந்து மீது நாட்டம் வந்தது. பள்ளியில் நடைபெறும் கைப்பந்துப் பயிற்சியில் அவரும் பங்கு பெற்றார். அதற்குரிய உடைகள் மற்றும் ஷூ உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகப் பணம் சேர்த்து வந்தார்.
தினமும் பெற்றோர் தனக்குத் தரும் 5 ரூபாய், 10 ரூபாயைச் செலவு செய்யாமல் சேர்த்து வைத்திருக்கிறார். அந்தப் பணத்தில் உடைகள் மற்றும் ஷூவை வாங்கி இந்தக் கோடை விடுமுறையில் நடைபெறும் விளையாட்டுப் பயிற்சி முகாமில் பங்குபெறத் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், கரோனா காரணமாக கோடையில் எந்த முகாமும் நடைபெறவில்லை. அதனால் சோர்வடைந்திருந்தார். இந்த நிலையில், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக கரோனாவால் உணவுக்கு வழியில்லாமல் வாடுவோர் நிலை குறித்த செய்திகளை அறிந்தவருக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
இதையடுத்து வடுவூர் இளைஞர்கள் வழிகாட்டுதலில், தான் சேமித்து வைத்திருந்த பணம் 1,770 ரூபாயை வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் பசுபதியிடம் நேற்று நேரில் சென்று வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், மைதிலிநாதனை மனதாரப் பாராட்டினார். மைதிலிநாதன் அளித்த நிதி, மாவட்ட ஆட்சியரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தனது எதிர்கால லட்சியத்துகாகச் சேமித்த பணத்தை, கரோனா கஷ்டத்தில் இருக்கும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக வழங்கிய சிறுவன் மைதிலிநாதனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT