Published : 02 May 2020 05:19 PM
Last Updated : 02 May 2020 05:19 PM

மாணவர்களின் சந்தேகங்களுக்கு ட்விட்டரில் பதில்: மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு

மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் வெப்பினார் நடத்த உள்ளதாக மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தின. அதில் சிக்கல்கள், பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்தது. வீட்டிலேயே இருப்பதால் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஏப். 27 அன்று ட்விட்டரில் கலந்துரையாடினார். பொதுத் தேர்வுகள், ஆன்லைன் வகுப்புகள், உளவியல் பிரச்சினைகள் உள்ளிட்ட மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இதில் பேசப்பட்டன.

இந்நிலையில், இரண்டாவது முறையாக மாணவர்களுடன் ட்விட்டரில் அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடுகிறார். மே 5-ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''மாணவர்களே, உங்களின் கல்வி, உளவியல் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உங்களுடன் நேரலையில் பேச உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகுடன் மாணவர்கள் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை முன்வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற அடிப்படையிலேயே தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x