Published : 25 Apr 2020 08:09 PM
Last Updated : 25 Apr 2020 08:09 PM

மக்களுக்கு இலவச முகக்கவசம்: ஊரடங்கில் மாணவிகளின் ஊர்மெச்சும் சேவை

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால், கிராமத்துப் பெட்டிக்கடைகளிலும் இப்போது முகக்கவச விற்பனை சூடுபிடிக்கிறது. இப்படியான சூழலில், மூன்று மாணவிகள் சேர்ந்து தங்கள் கிராம மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களைக் தைத்து வழங்கியிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தின் காட்டாத்துறை அருகில் உள்ளது அக்கனாவிளை கிராமம். இப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்த இதே பகுதியை சேர்ந்த அனு, ஜெனிசா, விஜி ஆகியோர் தான் இப்படி முகக்கவசங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஜெனிசா கல்லூரி மாணவி. அனுவும் விஜியும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள்.

இவர்கள் மூவரும் சேர்ந்து முதல்கட்டமாக தங்கள் அக்கனாவிளை கிராம மக்கள் அனைவருக்கும் இலவசமாக தாங்களே தைத்த முகக்கவசங்களை வழங்கியிருக்கிறார்கள். தொடர்ந்து பிறபகுதிகளில் இருப்போர் கொடுக்கும் துணிகளை வாங்கியும், இலவசமாக முகக்கவசங்களைத் தைத்துக் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்த அவர்கள் மூவரும் நம்மிடம் கூறுகையில், “ஊரடங்கு சமயத்தில் சும்மா வீட்டில் முடங்கி இருக்காமல் உபயோகமாக ஏதாவது செய்யலாம் என எங்களுக்குள் ஆலோசித்தோம். அப்போதுதான் இப்போதைய நிலையில் அனைவருக்கும் பயன்படும் வகையில் மாஸ்க் தைத்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தோம்.

இப்போது, ‘இயற்கையுடன் ஓர் பயணம்’ என்னும் தன்னார்வ அமைப்பினர் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக மாஸ்க் தைத்துக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இப்போது இலவசமாக மாஸ்க் தைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x