Published : 03 Mar 2020 10:47 AM
Last Updated : 03 Mar 2020 10:47 AM

குட்டிக் கதை 24. புத்திசாலி வனிதா!

“சுஜா இன்னிக்கும் ஸ்கூலுக்கு வரலையா?”

“ஆமா அமுதா, நம்ம சுஜாதான் எப்பவும் முதல் மார்க் வாங்குவா, ஒரு நாள்கூட லீவ் போட மாட்டா, ஆனா இப்போ ஒரு வாரமா வரலைன்னா ஏதாவது காரணம் இருக்கும். இன்னைக்கு சாயந்தரம் அவங்க வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா?”

“வேணாம் வனிதா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சுஜா அம்மா இறந்த பிறகு அவங்க அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகிட்டார், அவங்க சித்தி ரொம்ப கடுமையாக நடந்துப்பாங்களாம், நாம போனா ஏதாவது திட்ட போறாங்க”

“என்னதான் சொல்றாங்கன்னு போய்தான் பார்ப்போமே, உனக்கு பயமா இருந்தா நான் மட்டும் போறேன்”

“நாம மூணு பேரும் ரொம்ப நாள் ஃபிரண்ட்ஸ்தானே, நானும் கூட வர்றேன்”

மாலை அமுதாவும் வனிதாவும் சுஜா வீட்டுக்கு சென்றனர். “நாங்க சுஜாவோட படிக்கிறோம், ஒரு வாரமா சுஜா ஸ்கூலுக்கே வரல, அதான் என்ன ஆச்சுன்னு எங்க டீச்சர் கேட்டுட்டு வரச் சொன்னாங்க”

“காரணம்லாம் சொல்ல முடியாது. ஆனா இனி அவ ஸ்கூலுக்கு வர மாட்டான்னு போய் சொல்லிடுங்க” என்று சுஜாவின் சித்தி எரிச்சலோடு சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

“இனி நாம என்ன பண்ண முடியும், வா போகலாம்” என்று சொல்லியபடியே வெளியே வந்தனர். அடுத்த தெரு வழியே வந்து கொண்டிருந்த போது எதிரில் சுஜா வந்து கொண்டிருந்தாள்.

“என்ன ஆச்சு சுஜா, ஏன் ஒரு வாரமா நீ ஸ்கூலுக்கு வரலை?”

“அப்பாவிற்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு, இப்போ கொஞ்சம் பரவாயில்ல, ஆனா அவரால வேலைக்கு போக முடியாம போயிடுச்சு, வருமானத்திற்கு என்ன பண்றதுன்னு யோசிச்சு எங்க சித்தி என்னை வேலைக்குப் போகச் சொல்லிட்டாங்க”

“குழந்தைத் தொழிலாளர்கள் கூடாதுன்னு சட்டம் இருக்கே, உன்னை எப்படி வேலைக்குச் சேர்த்துகிட்டாங்க?”

“சம்பளம் கம்மியா தரலாம்ன்னுதான் யாருக்கும் தெரியாம இப்படிலாம் செய்யறாங்க, சரி நான் வீட்டுக்கு போறேன், இனி நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு நம்ம டீச்சர்கிட்ட சொல்லிடு”

“என்ன சுஜா, இப்படி சொல்ற, உனக்கு படிக்கணும்னு ஆசை இல்லையா?”

“இருக்கு, ஆனா என்ன பண்றது, என் தலையெழுத்துப்படி நடக்கட்டும் விடு, நான் வீட்டுக்கு லேட்டாப் போனா சித்தி திட்டுவாங்க”

மறுநாள், ”என்ன யோசிக்கற வனிதா” என்றாள் அமுதா

“எப்படியாவது சுஜா ஸ்கூலுக்கு வர மாதிரிப் பண்ணணும், அதான் யோசிக்கிறேன்”

“என்ன செய்யப் போற?”

“ஐடியா கிடைச்சுருச்சு. ஆனா அது சஸ்பென்ஸ். இன்னும் ரெண்டு நாளில் அவ ஸ்கூலுக்கு வருவா பாரு” என்று வனிதா சொன்னாள்.

வனிதா சொன்னது போலவே இரண்டு நாட்களுக்குப் பிறகு சுஜா ஸ்கூலுக்கு வந்தாள். “ஹாய் சுஜா, இப்போ மட்டும் எப்படி உங்க சித்தி உன்னை ஸ்கூலுக்கு அனுப்பினாங்க?”

“அதான் எனக்கும் புரியல”

“வனிதா, நீதான் ஏதோ செய்திருக்க, அது என்னன்னு சொல்லு”

“1098-க்கு ஃபோன் செய்தேன், அவங்கதான் சுஜாவோட சித்தியை மிரட்டி இருப்பாங்க”

“அது என்ன பத்து ஒன்பது எட்டு அவ்ளோ தைரியமானவங்களா?”

“1098 என்பது குழந்தைகள் நல மையத்தினுடைய போன் நம்பர், அங்க போன் பண்ணி சொன்னா அவங்க சரியான நடவடிக்கை எடுப்பாங்க, குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல் செய்யறவங்க யாரா இருந்தாலும் அவங்களைப் பத்தி புகார் தெரிவிக்கலாம், அப்படி புகார் தர்றவங்க விவரத்தை யாருக்கும் சொல்லமாட்டாங்க, ரகசியமா வெச்சிருப்பாங்க”

“ஓ! எங்க சித்தி என் கிட்ட வந்து ’அம்மா, தாயே, நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம், நீ உடனே ஸ்கூலுக்குப் போ’ அப்படீன்னு சொன்னது இதனால தானா, ரொம்ப நன்றி வனிதா”

“நன்றி எல்லாம் எதுக்கு, நண்பர்களுக்குள்ள இதெல்லாம் எதுக்கு,”

“எப்படியோ மறுபடி மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து படிக்கலாம், இதுக்கெல்லாம் 1098-க்குத் தான் நாம நன்றி சொல்லணும்” என்று வனிதா சொன்னவுடன் எல்லோரும் மகிழ்ச்சியோடு சிரித்தனர்.

நீதி: சூழ்நிலைக்குத் தகுந்தவாறு புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x