Published : 18 Feb 2020 07:13 AM
Last Updated : 18 Feb 2020 07:13 AM
அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 50 சதவீத தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி கூறும்போது, “தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படிக்கின்றனர். ஆனால், மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.
அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, பஞ்சாப் மற்றும் பிஹார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு பதவி உயர்வான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியையும் பறிக்கப்படுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT