Published : 13 Feb 2020 11:15 AM
Last Updated : 13 Feb 2020 11:15 AM
பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டணமில்லா ஹெல்ப்லைன் சேவையை அறிவித்துள்ளது உத்தரப்பிரதேச அரசு.
உ.பி.யில் வரும் 18-ம் தேதி (பிப்.18) தொடங்கி மார்ச் 6 வரை பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளை உத்தரப் பிரதேச மத்யமிக் ஷிக்சா பரிசத் நடத்துகிறது.
இந்நிலையில், பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச துணை முதல்வரும் மாநில கல்வி அமைச்சருமான தினேஷ் சர்மா இது குறித்து கூறும்போது, "உத்தரப் பிரதேச மத்யமிக் ஷிக்சா பரிசத்தின் மூத்த அதிகாரி இதன் முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பாடங்கள் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை மாணவர்கள் 1800-180-5310 மற்றும் 1800-180-5312 என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்களில் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம்.
மாணவர்களின் நலன் கருதி ஆங்கிலம், அறிவியல், பொது அறிவியல், இந்தி, சம்ஸ்கிருதம், வேதியியல் போன்ற பாட நிபுணர்களும் இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
கடந்த வாரம், உ.பி. பொதுத் தேர்வு தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் தலைமைச் செயலர், டிஜிபி, கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
உத்தரப் பிரதேச பொதுத்தேர்வுகளை நேரலையில் கண்காணிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT