Published : 13 Feb 2020 08:41 AM
Last Updated : 13 Feb 2020 08:41 AM
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாளையொட்டி, தொட்டியபட்டி அரசு பள்ளியில் எடிசன் அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினத்தையொட்டி எடிசன் அறிவியல் மன்றத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.மூர்த்தி தலைமை வகித்தார்.
அவர் பேசும்போது, " நமது வகுப்பறையிலிருந்து ஒரு அறிவியல் விஞ்ஞானி உருவாகி பல புதிய அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நோக்கோடு இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அறிவியல் மன்றத்தில் சிறப்புடன் செயல்படும் மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்" என்றார்.
புரஜெக்டர் மூலம் திரையிடப்பட்டது
நிகழ்ச்சியில், தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் கண்டுபிடிப்புகள் பற்றிய படத்தொகுப்பு புரஜெக்டர் மூலம் திரையிடப்பட்டது.
எடிசனின் கண்டுபிடிப்புகள், அவரின் இளமைப் பருவம் மற்றும் எடிசனின் தாய்க்கு அவரின் ஆசிரியர் எழுதிய கடிதம் மற்றும் மேற்கோள்கள், அவரது தயாரிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள் ‘சார்ட்’ தயாரித்து எடுத்து வந்திருந்தனர். விழாவில் பள்ளி ஆசிரியைகள் ரேவதி, கஸ்தூரி, சண்முகப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT