Published : 23 Jan 2020 11:49 AM
Last Updated : 23 Jan 2020 11:49 AM
வேளாண் பணியில் உள்ள விவசாயிகள் மரணமடையும் போதோ விபத்தில்சிக்கும் போதோ அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டத்துக்கு உ.பி. அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வேளாண் தொழில் செய்து வரும்விவசாயிகள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தாலோ அல்லது விபத்தினால் 60 சதவீதத்துக்கு மேல் ஊனமுற்றாலோ, அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை உத்தரபிரதேச அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவையில்கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர்கள் ஸ்ரீ காந்த் சர்மா மற்றும் சித்தார்த்த நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘முக்யமந்திரி கிருஷக் துர்கட்னா கல்யாண் யோஜனா’ திட்டத்தின்கீழ், விவசாயிகள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். அதேபோல், விபத்தில் சிக்கி, 60 சதவீதத்துக்கும் அதிகமான உடல் ஊனமுற்றால் ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
இந்த திட்டம் 18-70 வயது வரை உள்ள விவசாயிகளுக்கு பொருந்தும். 2019-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதியில் இருந்து உயிரிழப்பு சம்பவம் நடந்திருந்தால், இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிவாரணம் பெறலாம். அதன்படி, சுமார் 2.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களுக்கான உரிமக்கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT