Published : 11 Jan 2020 01:26 PM
Last Updated : 11 Jan 2020 01:26 PM

புதுச்சேரி பள்ளிகளுக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை; தமிழகத்தில் எப்படி?

புதுச்சேரி பள்ளிகளுக்கு, ஜன.13-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு, 8 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14,15,16,17 ஆகிய தினங்கள் முறையே போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 18 மற்றும் 19-ம் தேதி வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை ஆகும்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை (ஜன.13) அரசு விடுமுறை விடவேண்டும் என்று பெற்றோர், மாணவர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஜன.13-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.13-ம் தேதி (திங்கட்கிழமை) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாள் பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக்கப்பட்டு ஈடு செய்யப்படும்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை மூலம் ஜன.12-ல் இருந்து ஜன.19 வரை பள்ளிகளுக்கு 8 நாட்கள் பொங்கல் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற அறிவிப்பு தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து வெளியாகுமா என்பதே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x