Published : 10 Jan 2020 10:45 AM
Last Updated : 10 Jan 2020 10:45 AM
சுதந்திரத்துக்குப் பின்னர் காஷ்மீரில் ரயில் போக்குவரத்து படிப்படியாக மேம்பட்டு வந்துள்ளது. தற்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே ரயில்வே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1, 110 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த பாலம் பாரிஸில் உள்ள பிரபல ஈபிள் டவரை விடவும் உயரமானது (ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர்). 1.3 கி.மீ., நீளம் கொண்ட இந்த பாலத்தின் உயரம் 359 மீட்டர். இந்தப் பாலத்தை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ரயில் பாலமாகும். இதுகுறித்து கொங்கண் ரயில்வே தலைவர் சஞ்சய் குப்தா கூறுகையில், “இந்தப் பாலம் 150 ஆண்டு கால ரயில்வே வரலாற்றில் சவால் மிகுந்த இலக்காக உள்ளது. இதை வெற்றிக் கரமாக முடித்துவிட்டால் இதுவே பொறியியல் துறையின் அற்புதமாக இருக்கும்.
இந்த பாலமும், காஷ்மீருடன் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைக்கும் இந்த ரயில் பாதையின் பணிகள் 2021 டிசம்பரில் நிறைவடைந்துவிடும். 369 மீட்டருக்கு அதிகமான ஆற்றுப்படுகையின் மேல் 5,462 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT