Published : 01 Jan 2020 08:53 AM
Last Updated : 01 Jan 2020 08:53 AM

தமிழகம் முழுவதும் நடப்பு கல்வி ஆண்டில் 10,431 பேருக்கு ரூ.297.95 கோடி கல்விக் கடன்

தமிழகத்தில் இந்த ஆண்டு 10,431 பேர் வங்கிகள் மூலம் ரூ.297.95 கோடி மதிப்பிலான கல்விக் கடனை பெற்றுள்ளனர். இதில், அதிகபட்சமாக பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக 6,362 பேர் கல்விக் கடனை பெற்றுள்ளனர்.

கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தால் சில மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுவிடுகின்றனர். பணத்துக்காக மானவர்கள் படிப்பை பாதியில் விடுவதை தடுக்க வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசின் ‘வித்யாலட்சுமி போர்டல்’ 40 வங்கிகளுடன் இயங்கி வருகிறது. அதில் 70-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன.

கல்விக் கடன் திட்டங்கள் மூன்று பிரிவுகளாக உள்ளன. முதல் பிரிவில் ரூ.4 லட்சம் வரையிலும், 2-ம் பிரிவில் ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலும், 3-ம் பிரிவில் ரூ.7.5 லட்சம் முதல் எவ்வளவு கடன் தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு கடன் தொகை பெறலாம்.

கல்விக் கடனுக்கான வட்டித் தொகை, ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஆண்டுக்கு 15 முதல் 16 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். படிப்பு முடித்தவுடன் ஓராண்டு அல்லது வேலை கிடைத்த 6 மாதங்களுக்குப் பின்னர் கடன்தொகையைத் தவணையாகச் செலுத்த வேண்டும். இதன்படி ரூ.7.5 லட்சம் வரையான கடனை 4 முதல் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். ரூ.7.5 லட்சத்துக்கும் மேலான கடன் தொகையை 15 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.

இதன்படி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 10,431 பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:

நடப்புக் கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 11,265 பேர் ரூ.350.48 கோடி மதிப்பிலான கல்விக் கடன் கோரி விண்ணப்பித்தனர். இதில், 10,431 பேருக்கு ரூ.297.95 கோடி மதிப்பிலான கல்விக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.27.27 கோடி மதிப்பிலான 297 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ரூ.25.26 கோடி மதிப்பிலான 537 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக மிக அதிகபட்சமாக 6,362 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ரூ.149.02 கோடி கடன் வழங்கப்பட்டது.

499 பேர் வெளிநாடுகளில் கல்வி கற்க கடன் கோரி விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கு ரூ.63.56 கோடி வழங்கப்பட்டது. பிற படிப்புகளில் சேர 3,570 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ரூ.85.37 கோடி கடன் வழங்கப்பட்டது.

மேலும், கல்விக் கடன் வழங்கப்பட்ட 10,431 பேரில், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 680 பேருக்கு ரூ.35.52 கோடியும், சிறுபான்மை பிரிவினர் 2,424 பேருக்கு ரூ.56.49 கோடியும், பெண்கள் 4,167 பேருக்கு ரூ.112.70 கோடியும் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கல்விக் கடன் கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் கடன் வழங்கும் படியும் அனைத்து வங்கிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x