

சுரைக்குடுவைக்குள் கிறிஸ்துமஸ் குடிலை உருவாக்கி புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் கைவினைப்பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பயிற்சியை ஆசிரியர் உமாபதி அளித்து வருகிறார்.
கிராமப்புறங்களில் பயனற்றுக் கிடக்கும் தேங்காய் குடுமி, மட்டை, நார், ஓடு, பனை ஓலை போன்றவற்றைக் கொண்டு கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சியினை மாணவ மாணவியருக்கு ஆசிரியர் உமாபதி அளிக்கிறார்.
மாணவர்கள் தயாரித்த கைவினைப் பொருட்களைக் கொண்டு பள்ளி வளாகத்தில் "அழிவின் உயிர்ப்பு" என்ற தலைப்பில் காட்சியரங்கை உருவாக்கியுள்ளனர். இதனை சனி- ஞாயிறு விடுமுறை நாட்களில் உள்ளூர்- வெளிநாட்டு மக்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.
இதற்கிடையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாணவர்கள் பவித்திரன், நிரஞ்சன், கிருஷ்ணன் ஆகியோர் சுரைக்காய் குடுவைக்குள் குடில்களை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் உமாபதி கூறும்போது, ''மாணவர்களுக்கு கைவினைப் பயிற்சி அளிக்க புதுச்சேரி அரசின் கல்வித்துறை தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் சொந்தத் திறமை வெளிப்படுகிறது'' என்று கூறினார்.