Published : 24 Dec 2019 02:22 PM
Last Updated : 24 Dec 2019 02:22 PM
ஒட்டுமொத்த மாணவா் சேர்க்கை (ஜி.இ.ஆர்.- Gross Enrolment Ratio) இலக்கை எட்ட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைப் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிக்கை கோரியுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், அனைத்துப் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''உலகில் வறுமையைப் போக்கவும், நிலையான, நீடித்த வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை எட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, உயர் கல்வி நிறுவனங்களில் வருகிற 2023-ல் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 60 என்ற அளவில் இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய மாணவர் சேர்க்கை 49 சதவீதமாக உள்ளது. எனவே ஜி.இ.ஆர். விகிதத்தை உயா்த்த பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதுகுறித்த விவரத்தையும் வருகிற 30-ம் தேதிக்குள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்''.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT