Published : 22 Dec 2019 08:08 AM
Last Updated : 22 Dec 2019 08:08 AM

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி இறுதியில் செய்முறை தேர்வு: முன்னேற்பாடுகள் தீவிரம்

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர் களுக்கான செய்முறை தேர்வு ஜனவரி இறுதியில் நடைபெற உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படிநடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. வினாத்தாள், விடைத்தாள் மற்றும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் தயாரிப்பு போன்ற இறுதிகட்ட பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதியிலேயே செய்முறைத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பிப்ரவரி முழுவதும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அவகாசம் கிடைக்கும். இதையடுத்து செய்முறை தேர்வுக்கான முதல்கட்ட பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஆய்வகங்களை முடிவு செய்தல், கண்காணிப்பாளர்கள் நியமனம் உட்பட பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விடுமுறை ஒருவாரம் விடப்படுவதால் இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடித்து, அதற்கான விவரப்பட்டியலை அனுப்புமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x