Published : 09 Dec 2019 10:43 AM
Last Updated : 09 Dec 2019 10:43 AM
மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர்11 முதல் 20-ம் தேதி வரை தேர்வுத்துறையின் சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் வரும் மார்ச் மற்றும் ஜூன் பருவத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதியாக கல்வி மாவட்ட வாரியாக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விவரங்களையும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வது, தகுதிகள் மற்றும் அறிவுரைகளையும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும்அரசு தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். சேவை மையங்களில் டிசம்பர் 11 (புதன்) முதல் 20-ம்தேதி (வெள்ளி) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT