Published : 25 Nov 2019 12:15 PM
Last Updated : 25 Nov 2019 12:15 PM

மாணவர்களுக்கு நீச்சல்; பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் 

கோபி

மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காசியூர், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பூமி பூஜை போட்ட அவர், திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ''மாணவர்களுக்கு தற்காப்புக் கலை கற்றுத் தருவதற்கும் சாலை பாதுகாப்பு குறித்து கற்றுத் தரவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தொழிற்கல்வியைக் கற்றுத் தரவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விடுமுறை நாட்களில் அருகில் உள்ள தொழிற்சாலைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும். ஒரு காலத்தில் கிணறு அருகில் உள்ள இடங்களில் பெற்றோர்களே குழந்தைகளைக் கயிற்றில் கட்டி, கிணற்றில் விட்டு நீச்சல் பழக்கினர். ஆனால் அவையெல்லாம் இன்று மறைந்துவிட்டன. ஆகவே பெற்றோர் ஒத்துழைத்தால் மட்டுமே இவற்றை மேற்கொள்ள முடியும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x