Published : 14 Nov 2019 04:19 PM
Last Updated : 14 Nov 2019 04:19 PM
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தினந்தோறும் காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை அறிவுறுத்தலின்படி கோவை முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோயம்புத்தூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
இது 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். இதன்படி தினந்தோறும் ஒரு பாடத்துக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வைக் கட்டாயம் நடத்த வேண்டும். இதற்காக காலையில் 8.30 மணி முதல் 9.15 மணி வரையிலும் மாலையில் 4.30 முதல் 5.20 வரையிலும் பயிற்சி வழங்க வேண்டும்.
இதற்காக ஒரு பாடத்துக்கு 25 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்க வேண்டும். தேர்வுகள் நடத்தப்பட்ட பின்னர் 2 நாட்களுக்குள் மதிப்பீடு செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படாத பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT