Published : 07 Nov 2019 08:45 AM
Last Updated : 07 Nov 2019 08:45 AM

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்

மனோஜ் முத்தரசு

புகையிலை புற்றுநோயை உண்டாக்கும். புகையிலை உயிரைக் கொல்லும் என்று ஒருவரிடம் கூறினால், ‘பிறகு ஏன் அதை விற்பனை செய்கிறார்கள்’ என்று எதிர் கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் இல்லை.

உலகளவில் புகையிலை அதிகம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை பற்றியும், நோயின் தாக்கத்தை பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை.

புற்றுநோய் வந்தால், ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்து, நிச்சயம் இறந்து விடுவார்கள் என்று ஒரு பொய்யான கருத்தை நமது இந்திய சினிமா மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

புற்றுநோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு செய்ய தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் நவம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

முதன்முதலில் புகையிலையோ அல்லது சிகரெட், பீடி பழக்கத்தை ஒருவர் முயற்சி செய்யும்போது, அவரது நினைவில் அவருக்கு தெரிந்த புகைப்பிடிக்கும் ஒருவர்தான் வருகிறார். அவர் ஒரு நாளை ஒரு பாக்கெட் சிகரெட்டோ, 4 கட்டு பீடியோ குடிக்கிறார். அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை. நான் ஒன்றுதானே குடிக்க போகிறேன் என்று நினைக்கிறார். இதே தவறைதான் நன்கு படித்து அலுவலகத்தில் வேலை பார்ப்பவரும் செய்கிறார். இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

யாருக்கு வரும் தெரியாது

புகையிலை உட்கொள்ளவில்லை, எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் புற்றுநோய் எப்படி வந்தது என்று நோயாளிகள் பலர் மருத்துவரிடம் கேட்கின்றனர். உண்மையில் புற்றுநோய் ஒரு புரியாத புதிர் என்றே சொல்லலாம்.

பாதிப்புக்கு காரணம் கார்சினோஜென்

கார்சினோஜென்கள் எனப்படும் ஒருவகை ஊக்கிதான் நமது உடம்பில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இது புகையிலையில் மட்டுமே இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் வழியாகவும் உடலுக்குள் நுழைகின்றது.

செயற்கை வேதிப்பொருட்கள்

செயற்கை வேதிப்பொருட்களான சோடியம் பென்சோயிட், சோடியம் நைட்ரேட் ஆகியவை குழந்தைகளைப் பாதிப்பதுடன், பெரியவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரக் காரணமாகின்றன. செல்கள் பாதித்தால் கட்டியாகும். மரபுவழி, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகள் சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க்கான கட்டியா என்று தீர்மானிக்கின்றன.

பலவகை... ஒவ்வொன்றும் ஒருவகை

புற்றுநோய்கள் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. எந்த அளவு பாதிப்பு, குணப்படுத்த முடிவு, எவ்வளவு காலமாகும் என்பதை புற்றுநோயின் காலம்தான் முடிவு செய்யும். ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டால் நோயை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அடையாறு கேன்சர் இன்ஸ்டியூயூட் நிறுவனர் டாக்டர் சாந்தா.

மார்பகம், கர்ப்பப் பை

பெண்களின் மார்பு பகுதியில் ஏற்படும் இந்த வகை புற்றுநோய் மிகவும் ஆபத்தானது என்றே கூறலாம். ஏனென்றால், 2018-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் வந்துள்ளது. அதில் இந்தியாவில் 1,62,468 பதிவாகியுள்ளது. 50-64 வயதுடைய பெண்களுக்கு இவ்வகை அதிகமாக வருகிறது. உலகம் முழுவதும் 2018-ல் 6,27,000 பேரை, இந்தியாவில் 87,090 பேரையும் பலிவாங்கியுள்ளது இந்த புற்றுநோய். இதற்கு அடுத்தப்படியாக 21-67 வயதுடைய பெண்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் வருகிறது.
இந்தியாவில் 2018ல் 96,922 பேருக்கு இவ்வகை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 60,078 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நுரையீரல் புற்றுநோய்

புகைப்பழக்கம் அல்லது மாசு அதிகம் உள்ள காற்றை அதிகம் சுவாசிப்பதால் இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. 2018ல் 67,795 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 63, 475 பேர் பலியாகினர்.

ஆண்களுக்கு வாய் புற்றுநோய்

இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் 16 சதவீதம் இவ்வகை புற்றுநோய்தான். புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவை உட்கொள்வதால், இந்த புற்றுநோய் வருகிறது. 2018-ல் 72,616 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கல்லீரல் புற்றுநோய்

அதிவேகமாகப் பரவும் புற்றுநோயில் 2-வது இடம் வகிக்கிறது கல்லீரல் புற்றுநோய். சர்வதேச அளவில் ஒவ்வோர் ஆண்டும் 7,50,000 பேர் இதனால் இறக்கின்றனர். அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 7,80,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
இந்தியாவில் 2019ல் ஜூலை வரை 25,999 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோல், 19,676 பேர் பலியாகியுள்ளனர்.

மனவலிமை வேண்டும்

புற்றுநோய் ஒன்றும் பரவும் நோய் இல்லை. ஆனால், பரவும் என்று எண்ணி புற்றுநோயாளிகள் பலர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதனாலே மனவலிமை அற்று பல நோயாளிகள் நடைபிணமாக மாறிவிடுகின்றனர்.

உணவுப் பழக்கம், உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது புற்றுநோயில் மாத்திரமில்லை. எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். ஆரம்ப நிலையிலேயே மருத்து வரை அணுகி, நோய்க்குத் தீர்வு கண்டு வாழ்வை மீட்டு எடுக்கலாம்.

பரிசோதனை அவசியம்

புற்றுநோய் ஒரு நாளில் ஊருவாவதில்லை. நாள் பட்ட புண் போன்றதுதான். எனவே குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது முழு உடலை பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை இல்லை என்றாலும், இதற்காக ஒரு தொகையை தனியார் மருத்துவமனையில் கொடுப்பதில் தவறேதுமில்லை.

இந்தியாவிலேயே வசதி

புற்றுநோயின் தீவிரத்துக்கு ஏற்றார் போல அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை, இலக்கு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற பலவகையான சிகிச்சை முறைகள் இந்தியாவிலே உள்ளன.
புற்றுநோய் வந்து அதை மன உறுதியோடு அதை எதிர்த்து போராடி வெற்றிகொண்டவர்கள் பலர் நம்மிடையே உள்ளனர் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தகவல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், உலக சுகாதார நிறுவனம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x