Published : 21 Oct 2019 01:00 PM
Last Updated : 21 Oct 2019 01:00 PM
பிலிபித்
இஸ்லாமிய அறிஞரின் பாடலை பள்ளி மாணவர்களைக் கொண்டு பாட வைத்ததால், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர், மனிதாபிமான அடிப்படையில் தற்போது மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் ஃபர்கான் அலி (45). இவர் அண்மையில் பாகிஸ்தானியக் கவிஞரும் அரசியல்வாதியுமான இக்பால் எழுதிய 'லப் பே ஹாத்தி ஹே துவா' என்னும் பாடலை தனது மாணவர்களைக் கொண்டு காலை வழிபாட்டு வேளையில் பாட வைத்தார். இதை அறிந்த உள்ளூர் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தலைவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட்டார்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி தேவேந்திர ஸ்வரூப் கூறும்போது, ''இடைநீக்கத்துக்கு உள்ளான ஃபர்கான் அலி, தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து ஆசிரியராக மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றுத் திறனாளி என்பதால் மனிதாபிமான அடிப்படையில் அவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருங்காலத்தில் ஃபர்கான் அலி துறை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது'' என்றார்.
ஃபர்கான் அலிக்கு கடுமையான மற்றும் இறுதி எச்சரிக்கை செய்யப்பட்டது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியர் ஃபர்கான் அலி, ''என்னுடைய இடை நீக்கம் நேர்மையற்றது. இந்த விவகாரத்தில் சிலர் மத சாயம் பூச முயற்சித்தனர். உருது பாடலைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களை 'சரஸ்வதி வந்தனா' பாட வைத்தேன். அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை'' என்று தெரிவித்தார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT