Published : 21 Oct 2019 10:23 AM
Last Updated : 21 Oct 2019 10:23 AM

3-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 497 ரன்கள் குவிப்பு 

ராஞ்சி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, ராஞ்சி நகரில் நடந்து வருகிறது. இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சர்மா, 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலையில் ஆட்டத்தை தொடர்ந்த இந்த இரு வீரர்களும் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுகளை நொறுக்கித் தள்ளினர். இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே, 169 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். 4-வது விக்கெட்டுக்கு 267 ரன்களைக் குவித்து இந்திய அணி வலுவான நிலையை எட்டக் காரணமாக இருந்த இந்த ஜோடியை, லிண்டே பிரித்தார். 192 பந்துகளில் 115 ரன்களைக் குவித்த ரஹானே, லிண்டேவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

மறுபுறம் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, 249 பந்துகளில் தனது இரட்டைச் சதத்தைக் கடந்தார். மிகக் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்த அவர், 255 பந்துகளில் 212 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்ரேட்டை மேலும் அதிகரிக்கும் முனைப்புடன் ஆடினர். இதனால் விக்கெட்களும் வேகமாக சரிந்தன. 116.3 ஓவர்களின் இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை எடுத்திருந்தபோது, கேப்டன் விராட் கோலி, ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மையால் 2-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x