Published : 18 Oct 2019 09:19 AM
Last Updated : 18 Oct 2019 09:19 AM

வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிக்கு 7,345 தீயணைப்பு வீரர்கள் தயார்

சென்னை

வடகிழக்குப் பருவமழை பாதிப்பை ஏற்படுத்தினால் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 7,345 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளுக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, விடுப்பில் இருப்பவர்களையும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை உறுதிபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் முதல் பரவலாக மழைபெய்து வருகிறது. இதற்கிடையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மட்டும் கூடுதலாக 10 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படை வீரர்களும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 7,345 வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். விடுப்பில் இருப்பவர்கள் பணிக்கு திரும்பவும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் விடுப்பு எடுக்கும்படி தீயணைப்பு படை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் தூத்துக்குடி, சேலம், சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 331 தீயணைப்பு காவல் நிலையங்களில் உள்ள வீரர்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை துணை இயக்குநர்கள் கூறியதாவது: "தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஒக்கி, வர்தா மற்றும் கஜா புயல்களின்போது மீட்புப் பணிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டோம். உயிர்களைக் காப்பாற்றுவது, தாழ்வான, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்பது, விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி இயல்புநிலை திரும்பச் செய்தது என மீட்புப் பணிகளில் துரிதமாகச் செயல்பட்டோம். தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் தயாராகி விட்டோம்.

தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகளும் சம்பவ இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நீச்சலில் நன்கு தேர்ச்சி பெற்ற 123 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள் ஆங்காங்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி ஊர்திகள் தவிர கண்ணாடி இழைகளிலான 8 விசைப் படகுகள், உயிர்காக்கும் மிதவைகள் மற்றும் மேலங்கிகளுடன் கூடிய 86 மிதவைப் படகுகள், நீட்டிச் சுருக்கும் 13 ரப்பர் விசைப்படகுகள், இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட
வர்கள் உள்ள இடத்தை அடையாளம் காணும் 11 கருவிகள், அதிக அளவு நீர் வெளியேற்றும் திறனுள்ள எளிதில் தூக்கிச் செல்லக் கூடிய 111 பம்ப்புகள் என மீட்புப் பணிக்கு தேவையான அத்தனை கருவிகளையும் பழுது நீக்கி, பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x