Published : 16 Oct 2019 02:29 PM
Last Updated : 16 Oct 2019 02:29 PM
ராஞ்சி
ஜார்க்கண்ட் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த வைஷ்ணவி என்னும் சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:
''வைஷ்ணவி என்னும் சிறுமி ஜாம்ஷெட்பூரில் உள்ள சிக்ஷா நிகேதன் என்னும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் நேற்று (அக். 15) காலை பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் (ப்ரேயர்) கலந்துகொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த டாட்டா மோட்டார்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பள்ளி முதல்வர் சுஷ்மிதா டே மற்றும் துணை முதல்வர் ரஜனி பாண்டே ஆகியோர் உடன் சென்றனர். வைஷ்ணவிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வைஷ்ணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்''.
இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலை வைஷ்ணவியின் பெற்றோரும் உறுதி செய்தனர். சிறுமி ஓர் இதய நோயாளி என்றும் அவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளியில் விசாரணை நடத்தக் கோரி மாவட்டக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT