Published : 15 Oct 2019 11:32 AM
Last Updated : 15 Oct 2019 11:32 AM
கொல்கத்தா
கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக மாணவர்களை அதிகம் கவர்ந்த விளையாட்டு கால்பந்து. மற்ற நாட்களில் கால்பந்து போட்டிகளைப் பார்க்காவிட்டாலும், உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்போது எல்லோரும் அதை தவறாமல் பார்ப்பார்கள். இப்போட்டியைப் பார்க்கும்போதெல்லாம், ‘இந்தியா ஏன் இதில் கலந்துகொள்ளவில்லை’ என்ற சந்தேகம் பலருக்கும் வரும்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பொறுத்தவரை ஒரு அணி சாதாரணமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடிவிட முடியாது. அதற்கு முன்னதாக அந்த அணி தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆடி வெற்றிபெற வேண்டும். உதாரணமாக ஆசிய கண்டத்தில் இருந்து அதிகபட்சமாக 5 அணிகள்தான் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியும். இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டுமானால் முதலில் ஆசிய நாடுகளுக்குள் நடக்கும் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெல்ல வேண்டும்.
2022-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் இப்போது உலகெங்கும் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் வங்க தேசத்துடன் இந்திய அணி மோதுகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நோக்கி ஒரு அடி முன்னேறி விட்டது என்று அர்த்தம்.
இன்று நடக்கவுள்ள போட்டியைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கால்பந்து அணியின் வீரரான உடன்டா சிங், “கொல்கத்தா ரசிகர்கள் எங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர். இதற்கு கைமாறு செய்யும் விதமாக, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முயல்வோம்” என்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில், ஆசிய கால்பந்து சாம்பியனான கத்தாருக்கு எதிரான போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இதனால் இந்திய வீரர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் உள்ளனர். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு இது கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT