Published : 07 Jul 2023 04:12 AM
Last Updated : 07 Jul 2023 04:12 AM
ஹரியாணா மாநிலத்தில் திருமணம்ஆகாதவர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஹரியாணா மாநிலத்தில் முதல்வர்மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணமாகாதவர்களுக்கும் பென்ஷன் அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கர்னால் மாவட்டத்தில் கமல்புரா என்ற கிராமத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மனோகர் லால்கட்டார், விரைவில் திருமணம்ஆகாதவர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
விரைவில், அமலுக்கு வர உள்ளஇந்த பென்ஷன் பெற தகுதிகளாகசில விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமணம் ஆகாதவர்கள் 45 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹரியாணாவில் திருமணமாகாதவர்கள் சுமார் ஒருலட்சத்து 25 ஆயிரம் பேர் மாதந்தோறும் 2,750 ரூபாய் பென்ஷன் பெற உள்ளனர்.
தற்போது திருமணமாகாதவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு பென்ஷன்வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது நாட்டிலேயே ஹரியாணா மாநிலத்தில்தான் முதல்முறை ஆகும். ஏற்கனவே, பெண் குழந்தைகள் மட்டும் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையர் இருவரில் ஒருவர் உயிரிழந்தாலும் பென்ஷன் வழங்கும் திட்டம் ஹரியாணாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT