Published : 21 Jun 2023 04:05 AM
Last Updated : 21 Jun 2023 04:05 AM
பள்ளி நேரத்தில் பேருந்து வசதியில்லாததால் 5 கி.மீ தூரம் நடந்து செல்கிறோம். பள்ளி சென்றுவர பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று ராமநாதபுரம் ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் நேரில் முறையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கைமனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது திருஉத்தரகோசமங்கை அருகே கே.கொடிக்குளம், வித்தானூர், களரி, வெங்குளம், புத்தேந்தல், கதைக்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்து ஆட்சியரிடம் பேருந்து வசதி இல்லாததால் நாங்கள்தினமும் பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் நடந்துதான் செல்கிறோம். பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். அதுதொடர்பான கோரிக்கை மனுவையும் ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர்.
இது குறித்து கே.கொடிக்குளத்தைச் சேர்ந்த அன்னலெட்சுமி கூறியதாவது,
எனது மகள் உட்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 50 மாணவ,மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்புபடிக்க 5 கி.மீ. தூரமுள்ள திருஉத்தரகோசமங்கை அரசுப் பள்ளிக்குச் செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதியில்லை. அதனால், தினமும் நடந்துதான் சென்று வருகின்றனர். சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து திருஉத்தரகோசமங்கைக்கு அதிகாலை 5.30 மணிக்கு மட்டுமே பேருந்து வந்து செல்கிறது. அதனால் மாணவ,மாணவிகள் பள்ளி செல்ல பேருந்துவசதியில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, காலை 8 மற்றும் மாலை 5 மணிக்கு பேருந்து வசதி செய்து கொடுத்தால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றுவர பேருதவியாக இருக்கும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT