Last Updated : 31 Jan, 2023 06:15 AM

 

Published : 31 Jan 2023 06:15 AM
Last Updated : 31 Jan 2023 06:15 AM

வாசிப்பின் வண்ணமயமான வாசல்கள்

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதுமைதான் இரண்டு மாத இதழ்களின் அறிமுகம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்காக தேன்சிட்டு. ஆசிரியர்களுக்காக கனவு ஆசிரியர். முற்றிலும் வண்ணப் பக்கங்கள். அருமையான வடிவமைப்பு.

வாசிப்பின் வாசலைத் திறக்கும் வரவு இவை. பள்ளி நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்கலாம். இந்த அறிவிப்பே தேன்சிட்டு இதழின் முதல் தேனான செய்தி. இம்மாதத் திரைப்படம், குழந்தைப் பாடல், கதை என குழந்தைகளைக் கைப்பிடித்து வாசிப்பிற்குள் அழைத்துச் செல்கிறது.

பயனுள்ள பொழுதுபோக்கு: பாடங்கள் சார்ந்த சுவையான செய்திகள் தேடலைத் தொடக்குபவை. வைரங்கள் எப்படி உருவாகின்றன? மின்மினியின் வெளிச்சம் எனச் சுவையான தகவல்கள். காகிதக் கலை, கைவினைப்பொருள் செய்தல், புதிர்கள், விடுகதை கள், ஓவியம் என பயனுள்ள பொழுதுபோக்குகள் உள்ளன. கைபேசியில் விளையாடுவதையே பொழுது போக்காகக் கொண்ட கேரளாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஸாக் சங்கீத்.

உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தைப் புத்தகத்தில் பார்க்கிறான். அதைப்பற்றி மேலும் அறிய புத்தகங்களைத் தேடி வாசிக்கிறான். வரலாற்றில் ஆர்வமும், வாசிப்பும் தொடர்கிறது. தான் வாசித்த நிகழ்வுகளைப் பற்றி 3 வரிகளில் எழுதத் தொடங்குகிறான். அது புத்தகமாக வெளிவந்து பாராட்டைப் பெறுகிறது. ஸாக் சங்கீத் பற்றிய அரைப்பக்க கதை நம் குழந்தைளை வாசிக்கவும் எழுதவும் தூண்டும். படக்கதை, குழந்தைகள் நூல் அறிமுகம், மாவட்டச் செய்திகள் போல தேன்சிட்டில் இன்னும் ஏராளமான செய்திகள்.

ஆசிரியருக்கான தேடல்: கனவு ஆசிரியர் இதழைப் பார்த்தாலே இது கனவா, இல்லை நனவா என்று தோன்றும். அப்படியான வடிவமைப்பு மட்டுமல்ல, ஆசிரிய ருக்குத் தேவையான செய்திகளும் கொட்டிக் கிடக்கின்றன. மாணவர் மையமாக வகுப்பறையை மாற்றும் உத்திகள் ஆசிரியருக்கான தேடலைத் தொடங்குகின்றன.

வகுப்பறைக்குள் சில குழந்தைகள் கற்றலில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். அவர்கள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது ஆசிரியர் கடமை. அவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது குறித்தும் 'எல்லோருக்குமான கல்வி ' என்ற தொடர் விளக்கமாகக் கூறுகிறது.

புத்துணர்வு: ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய பகல் கனவு, டோட்டோ சான் போன்ற புத்தகங்களின் அறிமுகம் நல்ல தொடக்கம். செயல்வழிக் கற்றல், எளிய பரிசோதனைகள் மூலம் அறிவியலை வளர்க்கும் ஆசிரியர் கண்ணபிரான். அரசு பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க ஆசிரியை செங்கமலநாச்சியாரின் முயற்சிகளை வாசிக்கும் ஆசிரியர்கள் புத்துணர்வு பெறுவர்.

படம் பார்க்க தூண்டும்: நூலக வாசிப்பு, வகுப்பறை அனுபவங்கள், கவிதை, சிறுகதை என ஏராளமான பகுதிகள் உள்ளன. முற்றிலும் சேட்டைக்காரர்கள் நிரம்பிய வகுப்பறை என்று பள்ளியே வெறுத்து ஒதுக்கும் 10-ம் வகுப்பின் இறுதிப்பிரிவு. ஒதுக்கப்பட்ட மாணவர்களின் குடும்பச்சூழலை அறிந்து அதற்கேற்ப அவர்களின் மனங்களைக் கவர்ந்த ஆசிரியர்.

எப்படி நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார் என்பது குறித்த மராத்திப் படம் தஹாவி பா. அப்படத்தின் விமர்சனம் ஆசிரியரைப் படம் பார்க்கத் தூண்டும். புத்தகம் தாண்டிய வாசிப்பை வளர்த்தெடுப்பதே கல்வியில் மகத்தான மாற்றங்களுக்கான தொடக்கப்புள்ளிகள்.

கட்டுரையாளர் பள்ளி ஆசிரியர், “கலகல வகுப்பறை”, "சீருடை ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்கள்" உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x