Published : 31 Jan 2023 04:07 AM
Last Updated : 31 Jan 2023 04:07 AM

ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 இடங்களில் சோதனை: ரூ.5.91 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பிரதிநிதித்துவ படம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.5.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் 12 நிலை கண்காணிப்பு குழு, 9 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

தொகுதி முழுவதும் 35 இடங்களில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீரப்பம் பாளையம் பிரிவில், நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல், காரில் எடுத்து வரப்பட்ட ரூ.3 லட்சம் மற்றும் ஆட்டோவில் எடுத்து வரப்பட்ட ரூ.ஒரு லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

கருங்கல் பாளையம் சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 3,800 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், வீரப்பம்பாளையம் பகுதியில் நடந்த சோதனையில், காரில் எடுத்து வரப்பட்ட ரூ.87 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தொகை தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x