Published : 07 Oct 2021 01:26 PM
Last Updated : 07 Oct 2021 01:26 PM

7.5% ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை; கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை

7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனப் பொறியியல் கல்லூரிகளுக்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, கடந்த ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல அரசுப் பள்ளி மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்விப் படிப்புகளில் சேர 7.5 சதவீத ஒதுக்கீட்டை திமுக அரசு அறிவித்தது. மேலும், இட ஒதுக்கீட்டின் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

எனினும், சில பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்திக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அறிவிப்பில், ''7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் பிற தேவையான கட்டணத்தைக் கல்லூரிகளுக்குச் செலுத்தும். இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும்.

எனினும் அரசின் அறிவிப்பை மீறிச் சில கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு செய்யும் கல்லூரிகள் குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்யப் பரிந்துரைக்கும்'' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x