Published : 10 Feb 2021 11:04 AM
Last Updated : 10 Feb 2021 11:04 AM

கவுரவ விரிவுரையாளர்கள், தொகுப்பூதிய உதவிப் பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்துக: உறுப்புக் கல்லூரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

கோவை

கடந்த 7 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தொகுப்பூதிய உதவிப் பேராசிரியர்களின் ஊதிய உயர்வைத் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், ஊதியத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் உறுப்புக் கல்லூரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் கோவை மண்டலத் தலைவர் ஜி.கவின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வருகின்ற கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பூதியம் பெற்றுப் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போதுள்ள விலைவாசி உயர்வினால், அவர்கள் பெறக்கூடிய ஊதியம் போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாகப் பல முறை தமிழக உயர் கல்வித்துறையிடம் முறையிட்டும், அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை

எனவே இதைத் தமிழக அரசு உடனடியாகத் தனி கவனத்தில் கொண்டு, அப்பேராசிரியர்களுக்குக் குறைந்தபட்சமாக ரூ.35,000 வழங்க வேண்டும். மேலும், மலைப் பிரதேசங்களில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றுகின்ற உதவிப் பேராசிரியர்களுக்கு மலைப்பிரதேசப் படி மற்றும் குளிர்காலப் படி ஆகியவற்றை, ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மேலும், கோவிட்-19 பெருந்தொற்று முடக்கத்தால் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தகுதியைப் பெற இறுதித் தறுவாயில் உள்ள பேராசிரியர்களுக்கு இரண்டு ஆண்டு காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x