Published : 09 Feb 2021 02:23 PM
Last Updated : 09 Feb 2021 02:23 PM

ரூ.21 கோடியில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வர் திறந்து வைத்தார்- சாதனை வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கல்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் சுமார் ரூ.21 கோடி மதிப்பில் விளையாட்டு உள்கட்டமைப்புகளைத் திறந்துவைத்து வீரர்களுக்கு ஊக்கத்தொகையைத் தமிழக முதல்வர் வழங்கினார்.

இதுதொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 16 கோடியே 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகள் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 4 கோடியே 74 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதிக் கட்டிடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

மேலும், 5-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற கே.சகாயபாரதிக்கு 40 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையும், 2019-ம் ஆண்டிற்கான சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செல்வன் டி.குகேஷ்க்கு 5 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையும் வழங்கினார்.

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றி வாகை சூடும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், சர்வதேச அளவில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்தல், மாணவர்கள் தங்கி விளையாட்டில் பயிற்சி பெற விளையாட்டு விடுதிகள் ஏற்படுத்துதல், விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், நேரு உள்விளையாட்டரங்கம் மற்றும் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கங்களில் 8 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புப் பழுது நீக்கப் பணிகள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல்; சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் உள்ள கையுந்துபந்து ஆடுகளம் மற்றும் பார்வையாளர் மாடத்திற்கு 1 கோடியே 42 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள Galvalume மேற்கூரை;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 97 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை நிலை விளையாட்டு மையக் கட்டடம்; ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரைவட்டம் வடிவிலான கையுந்து பந்து உள்விளையாட்டரங்கம், கபடி ஆடுகளம்;

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பைங்கினர் கிராமத்தில் 2 கோடியே 15 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறிய விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம்;

செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 4 கோடியே 74 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதிக் கட்டிடம்; என மொத்தம் 21 கோடியே 16 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகளைத் தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற 5-வது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சுவிஸ் லீக் போட்டிகளில் 1 வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சகாயபாரதியைப் பாராட்டி 40 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

சதுரங்க விளையாட்டில் 2019-ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செல்வன் டி. குகேஷைப் பாராட்டி 5 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையையும் வழங்கினார்.

கடந்த 2009-2010ஆம் ஆண்டு முதல் 2017-2018ஆம் ஆண்டுகள் வரையிலான சிறந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகளுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருது 16 வீரர்கள் மற்றும் 12 வீராங்கனைகள் என 28 நபர்களுக்கும், சிறந்த பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் விருது 27 நபர்களுக்கும், என மொத்தம் 55 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 55 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுப் பரிசுகளும், சிறந்த நடுவர்களுக்கான விருது பெறும் 5 நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பதக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுப் பரிசு ஆகியவைகளைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் / உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஷீலா ஸ்டிபன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x