Published : 16 Sep 2020 07:45 PM
Last Updated : 16 Sep 2020 07:45 PM
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இறுதிப் பருவ ஆன்லைன் தேர்வுகள் இன்று (செப்.16) தொடங்கின. தேர்வுகளை மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே எழுதினர்.
கரோனா ஊரடங்கால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உருவானது. முதலாமாண்டுக்கான 2-வது செமஸ்டர், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 4-வது செமஸ்டர் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
எனினும் யுஜிசி அறிவுறுத்தலின்படி, இறுதியாண்டு இளநிலை, முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர்களை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரிகள், பல்கலை. நிர்வாகங்கள் மேற்கொண்டன.
இந்நிலையில் முதல் முறையாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இறுதிப் பருவ ஆன்லைன் தேர்வுகள் இன்று (செப்.16) தொடங்கின. காலையில் 10 மணி முதல் 1 வரையிலும் மதியம் 2 முதல் 5 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றன. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே எழுதினர்.
இதைத் தொடர்ந்து விடைத்தாள்களைப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கத் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 140 கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT