Last Updated : 27 Aug, 2020 06:24 PM

 

Published : 27 Aug 2020 06:24 PM
Last Updated : 27 Aug 2020 06:24 PM

புதுச்சேரி சட்டக்கல்லூரிப் பருவத் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும்: கல்வியமைச்சரிடம் மாணவர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பருவத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அக்கல்லூரியில் படிக்கக்கூடிய காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை இன்று (ஆக.27) நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

''டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் செப்.14-ம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடர் சூழல் காரணமாக கடந்த மார்ச் 14-ம் தேதி மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை எங்களால் கல்லூரி நூலகத்தைப் பயன்படுத்த முடியவில்லை. கல்வித் தேவைக்கான எந்தவொரு தரவையும் பெற இயலவில்லை. ஆன்லைன் வகுப்புகளில் இந்தப் பருவத்துக்கான பாடத்திட்டம் முழுமையாகப் முடிக்கப்படவில்லை.

புதுச்சேரி, காரைக்காலில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. பொதுப் போக்குவரத்தும் இல்லை. இந்நிலையில் நாங்கள், கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதுவது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கும்.

கரோனா பேரிடர் சூழலைக் கருத்தில் கொண்டு தேர்வு நடைமுறைகள் தொடர்பாகப் பல்கலைக்கழக மானியக் குழு சில வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் தேர்வை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x