Published : 18 Aug 2020 05:03 PM
Last Updated : 18 Aug 2020 05:03 PM
பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் புதிய கல்வி ஆண்டான ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக மார்ச் 16-ம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்போதுவரை திறக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடாக பெரும்பாலான அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துப் பெற்றோர்கள் கவலை எழுப்பினர்.
பள்ளிகள் திறப்பு குறித்து நிபுணர் குழு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் கல்வித்துறைச் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் சிஜூ தாமஸ் வைத்யன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
1, 6, 9-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், இணைய வழி வகுப்புகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் டிசம்பர் வரை பள்ளிகளைத் திறக்காமல் இருக்கலாமா, அதன் சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ''தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை. பெற்றோரிடம் ஆலோசனை கேட்டு முடிவுகள் எடுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT