Published : 28 Apr 2020 01:15 PM
Last Updated : 28 Apr 2020 01:15 PM

ஜூம் செயலியைப் பதிவிறக்கக் கூறி மாணவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

10-ம் வகுப்பு மாணவர்களிடம் ஜூம் செயலியைப் பதிவிறக்கக் கூறிக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தினக்கூலித் தொழிலாளிகள் தினம் தினம் மன உளைச்சலிலேயே உள்ளனர். இதனால் ஏழை, எளியோர் தங்களின் வாழ்வாதாரத்தினை இழந்து எப்போது கரோனா முடிவுக்கு வரும் என்ற கேள்விக்குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படும் என்று கூறி மாணவர்களைத் தொடர்புகொண்டு ஜூம் செயலியைப் பதிவிறக்கம் செய் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாத மாணவர்கள் பெற்றோர்களைத் தொந்தரவு செய்கிறார்கள். பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலையில் ஆண்ட்ராய்டு போன் எப்படி வாங்க முடியும்?

ஆன்லைன் வகுப்புகள் வரவேற்புக்குரியவை. அதேசமயம் அதனைச் செயல்படுத்தும் வசதிகளை ஆராயவேண்டும். வரும் அழைப்பை ஏற்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாமல் மொபைல் போன் வைத்திருக்கும் பெற்றோரின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பை எப்படி எதிர்கொள்வார்கள்?

மேலும் ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனைச் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூம் செயலி மூலம் வகுப்புகள் நடத்தியபோது அதில் தவறான படங்கள் வெளிப்பட்டு தொடர்பிலிருந்த அனைவரும் பார்க்க நேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுகளால் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இந்தச் செயலியைத் தடை செய்துள்ளன.

மேலும் வேலையிழந்து நிற்கும் நடுத்தர வர்க்கம், தினக்கூலி வேலை செய்வோர் தங்கள் குழந்தைகளுக்கு லேப்டாப், ஹெட்செட் வாங்கிக் கொடுத்து தனியறை என்பதே அறியாதவர்கள் அதிவேக இணைய இணைப்புடன் ஆன்லைன் வகுப்பைக் கவனிக்க வசதி செய்து கொடுப்பது சாத்தியமா?

இதற்கு வாய்ப்பில்லாத குழந்தைகளின் நிலை என்னவாகும்? சம வாய்ப்பு மறுக்கப்படுமே. இந்தச் சிக்கல்களாலும் பொருளாதாரக் காரணங்களாலும் இடை நிற்றல் அதிகரிக்கலாம். ஏற்கெனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு புதிய தலைவலியைக் கொடுக்கவேண்டாம்.

கல்வித் தொடர்பு விட்டுவிடாமல் இருக்க தற்போது அரசு கல்வித் தொலைக்காட்சி, பொதிகை சேனல்களில் ஒளிபரப்புவதுபோல அனைத்து முதன்மைத் தொலைக்காட்சிகளிலும் தினம் ஒரு மணி நேரம் மாறுபட்ட நேரங்களில் கல்விக்காக ஒதுக்கிப் பாடம் நடத்தினால் பாதிப்பில்லாமல் கல்வி கற்க முடியும்.

ஆகையால், ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் ஜூம் செயலியைப் பதிவிறக்கம் செய்யக் கட்டாயப்படுத்தி, பெற்றோர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று இளமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x