Published : 28 Apr 2020 12:39 PM
Last Updated : 28 Apr 2020 12:39 PM

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா?- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தின. அதில் சிக்கல்கள், பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்தது. வீட்டிலேயே இருப்பதால் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் நேற்று (ஏப். 27) இணையம் வழியாகக் கலந்துரையாடினார். ஆன்லைன் வகுப்புகள், உளவியல் பிரச்சினைகள் உள்ளிட்ட மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இதில் பேசப்பட்டன.

அத்துடன் பொதுத் தேர்வுகள் குறித்த கேள்விகளும் கணிசமான அளவில் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் தேர்வுகள் குறித்து அமைச்சர் பொக்ரியால் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் கூறும்போது, ''ஊரடங்கு முடிவடைந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பும்போது பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்பது குறித்து சிபிஎஸ்இ ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை எல்லா நேரங்களிலும் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேநேரம் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். தேர்வுகள் நடத்தப்படாத பாடங்களுக்கு, முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும்'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் மீதமுள்ள பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் 12-ம் வகுப்புக்கு முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் இருக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x