Published : 10 Apr 2020 05:30 PM
Last Updated : 10 Apr 2020 05:30 PM

தேவைப்படுவோர் நீட் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம்: தேதி நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த தேர்வு மையம் உள்ள நகரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நீட் தேர்வு என அழைக்கப்படுகிறது. 12-ம் வகுப்பை முடித்தவர்களும் அதே வகுப்புப் பொதுத் தேர்வை எழுதியவர்களும் நீட் தேர்வை எழுதத் தகுதியானவர்கள்.

இதற்கிடையே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த தேர்வு மையம் உள்ள நகரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

மாணவர்கள், தங்களின் நீட் தேர்வு விண்ணப்பப் படிவத்தில் தேர்வு எழுத விரும்பும் நகரத்தை மாற்றிக் கொள்ளலாம். ஏப்ரல் 14-ம் தேதி வரை இதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

என்டிஏ இயக்குநர் வினீத் ஜோஷி, ''மாணவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு நகரத்திலேயே அவர்களைத் தேர்வெழுத அனுமதிக்க, என்டிஏ போதிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. எனினும் நிர்வாகக் காரணங்களுக்காக என்டிஏ எடுக்கும் முடிவே இறுதியானது'' தெரிவித்துள்ளார்.

தேர்வு நகரத்தை மாற்றிக்கொள்ள என்டிஏவுக்கு மாணவர்கள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கிரெடிட்/ டெபிட் கார்டுகள்/ இணையவழி வங்கிப் பரிவர்த்தனை/ பேடிஎம் மூலமாக பணத்தைச் செலுத்தலாம்.

கரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x