Published : 10 Apr 2020 04:58 PM
Last Updated : 10 Apr 2020 04:58 PM

25க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை: பள்ளிகளின் விவரம் சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

25க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளின் விவரத்தைச் சேகரிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 48 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனினும் சுமார் ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் ஒற்றை இலக்கம் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே படித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளை, அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைத்துவிட தமிழக அரசு முடிவெடுத்தது. மிகக் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு அவை நூலகங்களாக மாற்றப்பட்டன. இதற்குக் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே தற்போது கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 25க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து அறிக்கையாகத் தொகுத்து அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x