Published : 21 Mar 2020 06:02 PM
Last Updated : 21 Mar 2020 06:02 PM

மக்கள் ஊரடங்கு: மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள்; பரிசு, சான்றிதழ்கள் உண்டு

மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்கும் விதமாகவும் கரோனோவைத் துரத்தவும் மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

உலக மக்களை அச்சுறுத்தி வருகின்ற கரோனோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தொற்று நோய் பரவாமல் தடுப்பதில் ஒவ்வொரு தனிமனிதனின் பங்கும் இன்றியமையாதது.

இது தொடர்பாக கலிலியோ அறிவியல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''கரோனா சங்கிலித் தொடரினைத் தடுப்பதற்காக மத்திய அரசு நாளை (22.3.2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே இருந்து ஒரு நாள் சுய ஊரடங்கு செய்வதற்காக அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசுக்குத் துணை நிற்கும் விதமாகவும் வீட்டிலே இருக்கின்ற குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்துள்ளன.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்குத் தன் சுத்தம், சுற்றுப்புற, சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓவியப் போட்டியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கவிதைப் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஓவியப்போட்டி:

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான தலைப்பு: தன் சுத்தம்

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தலைப்பு: சுற்றுப்புறச் சூழலும் சுகாதாரமும்


கவிதைப்போட்டி:

கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டிக்கான தலைப்பு : துரத்துவோம், கரோனோவை!

பொதுமக்களுக்கான தலைப்பு: உங்களின் சுத்தமே உலகத்தின் சுகாதாரம்

இந்தத் தலைப்புகளில் கவிதைகளை எழுதி அனுப்பலாம்.


போட்டி விதிமுறைகள்:

* அனைவரும் வீட்டிலிருந்தபடியே ஓவியங்களை வரைந்து மற்றும் கவிதைகளை எழுதி கீழ்க்காணும் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும்.

* ஓவியங்களை வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பேப்பரில் வரைந்து அதை தெளிவாகப் புகைப்படம் எடுத்து 8778201926 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அல்லது kannatnsfudt@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு, 22-ம் தேதி (நாளை) இரவுக்குள் அனுப்ப வேண்டும்.

* மாணாக்கர்கள் தாங்களாகவே சொந்தமாக வரைந்து அனுப்ப வேண்டும். தங்களின் பெயர், வகுப்பு, பள்ளி, முகவரியுடன் அனுப்பவும்.

* சிறந்த ஓவியங்களுக்கு மற்றும் கவிதைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

*கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இணைந்து நிற்போம்! கரோனோவை விரட்டுவோம்!!''.

இவ்வாறு கலிலியோ அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x