Published : 18 Mar 2020 04:05 PM
Last Updated : 18 Mar 2020 04:05 PM

மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லை; பரிசோதனைப் பணிகளில் மாணவர்கள்- புதுச்சேரி ஆட்சியர் உத்தரவு

கரோனாவை முன்னிட்டு மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லை என்றும் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பணிகளில் மருத்துவ மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் புதுச்சேரி ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:

''கரோனா வைரஸ் (கோவிட் -19) பரவாமல் இருக்க தற்போதுள்ள சுகாதாரத்தை வலுப்படுத்தும்படி உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரி சுகாதாரத் துறையை வலுப்படுத்த ஆட்கள் தேவைப்படுகின்றனர். எனவே, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், பிசியோதெரபி மற்றும் பாரா மெடிக்கல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை கிடையாது.

அனைத்து மாணவர்களும் சுகாதாரத் துறையை வலுப்படுத்த அழைத்துக் கொள்ளப்படுவர். குறிப்பாக பரிசோதனை உள்ளிட்ட தேவையான பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் தேவையான இடங்களில் அவர்களைப் பணியில் அமர்த்துவார். இதற்கு அனைத்துக் கல்லூரித் தலைவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x