Last Updated : 18 Mar, 2020 01:10 PM

 

Published : 18 Mar 2020 01:10 PM
Last Updated : 18 Mar 2020 01:10 PM

தேர்வு இல்லாமலே பாஸ்: 8-ம் வகுப்பு வரை உ.பி. அரசு உத்தரவு

தேர்வு இல்லாமலே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யுமாறு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உ.பி.யில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு, தேர்வுகள் இல்லாமலேயே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்குச் செல்லலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உ.பி.யின் துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான தினேஷ் சர்மா கூறும்போது, ''தேர்வு இல்லாமலே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் மாணவர்கள் செயலாற்றியதை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தரம் உயர்த்தப்படுவர்'' என்று தெரிவித்துள்ளார்.

உயர்நிலைப்பள்ளி மற்றும் இண்டர்மீடியட் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 2-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பீதியால் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு வர ஆசிரியர்கள் தயங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் அந்தத் தேர்வுகளின் முடிவுகளும் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x