Published : 14 Mar 2020 06:16 PM
Last Updated : 14 Mar 2020 06:16 PM

எல்கேஜி, யுகேஜிக்கு விடுமுறைதான்: முதல்வர் பழனிசாமி விளக்கம்

எல்கேஜி, யுகேஜிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸ் தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி, கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்ட பள்ளிகளில் 5-ம் வகுப்பு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்து வந்தன. இதற்கிடையே ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இது சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிவிட்டுத் திரும்பிய முதல்வர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், ''எல்கேஜி, யுகேஜிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது உண்மைதான். இது தொடர்பான முறையான அறிவிப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும்.

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை என்பது குறித்தும் நாளை அறிவிக்கப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x