Published : 14 Mar 2020 12:27 PM
Last Updated : 14 Mar 2020 12:27 PM

கரோனா: எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை திடீரென நிறுத்திவைப்பு

கரோனா பாதிப்பைத் தவிர்க்க எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் மார்ச் 31 முடிய 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் வெளியிட்ட அறிவிப்பில், ''தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மார்ச் 16 முதல் 31-ம் தேதிவரை தொடர் விடுமுறை அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கோவிட்-19 வைரஸ் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்து வந்தன. இந்நிலையில் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை, தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்தபிறகு, மீண்டும் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமையில் இருந்து விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றோ, நாளையோ புதிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழக மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x