Published : 12 Mar 2020 04:51 PM
Last Updated : 12 Mar 2020 04:51 PM

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லை- தமிழக அரசு

சென்னை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து, மக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி செல்கின்ற குழந்தைகளால் மத்திய, மாநில அரசுகளின் இந்த மருத்துவ அறிவுறுத்தல்களை பின்பற்ற முடியாது. கரோனா வைரஸ் குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதில் தாக்க கூடியது. எனவே தமிழகத்தில் உள்ள நர்சரி முதல் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.

எனவே பள்ளிச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்குப் புகார் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், ''கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு தொடர்பான சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தின் எந்தப் பள்ளியிலும் மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை'' என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x