Published : 12 Mar 2020 04:10 PM
Last Updated : 12 Mar 2020 04:10 PM

கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில் இருக்கும் என எச்சரிக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவியும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அவர்கள் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (மார்ச் 12) உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, "சிலர் கரோனா வைரஸ் பரவுவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இத்தகைய வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா வைரஸ் தடுப்பு குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுகாதாரத் துறை தயார் நிலையில் உள்ளது. எந்த சுற்றுலாத் தலமும் மூடப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து செல்லலாம். எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x