Published : 29 Feb 2020 06:44 PM
Last Updated : 29 Feb 2020 06:44 PM
டெல்லி அரசுப் பள்ளிகளில் மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, லக்னோ பல்கலைக்கழகத்திலும் அதே படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரி அமிதா பாஜ்பாய் கூறும்போது, ''இந்த புதிய படிப்பின் மூலம், மாணவர்கள் எல்லாத் தருணத்திலும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பது கற்பிக்கப்படும். இது துறைசார் படிப்பாக இருக்கும். அறிவியல் மற்றும் எம்.காம் மாணவர்களும் இதைப் படிக்கலாம்.
ஆசிரியர் முதுகலைப் படிப்பின் 3 மற்றும் நான்காவது செமெஸ்டரில் இந்தப் பாடம் எடுக்கப்படும். இதில், தத்துவவியல், கீதை உள்ளிட்ட பாடங்களும் இருக்கும். இதற்கான பாடத் திட்டம் விரைவில் கல்வி அலுவல் குழுவுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்தப் படிப்புக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளும் வருங்காலத்தில் தொடங்கப்படும்'' என்றார்.
மகிழ்ச்சிகரமான பாடத்திட்டம் என்பது என்ன?
டெல்லி அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தில் மாணவர்கள் மதிப்பெண்கள் குறித்தோ, எழுத்துத் தேர்வுகள் குறித்தோ கவலை கொள்ள வேண்டியதில்லை. குழந்தைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து அறிந்துகொள்வதே இத்திட்டத்தின் இலக்கு ஆகும்.
டெல்லியில் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இத்திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதைக் கற்பித்து வருகின்றனர். மகிழ்ச்சிகரமான பாடத்திட்டத்தால் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக கேஜ்ரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT